Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Monday, August 8, 2011

காகிதப் பூ [சிறுகதை - 6]







கையில் ஒரு பெரிய அழுக்கு பையுடன் நடந்து கொண்டு இருந்தான் அவன். அவனுடைய கண்களில் தாகமும் இருந்தது ஒரு தாக்கமும் இருந்தது. இருந்தாலும் கண்ணில் பட்ட குப்பை காகிதங்களை எடுத்து அவனுடைய பையில் அள்ளி போட்டபடி நடந்து கொண்டு இருந்தான்.



அவன் மனதில் வாழ்க்கையை எப்படி முன்னெடுத்து போக போகிறோம் என்ற குழப்பம் இருந்தாலும் உதட்டில் சிறு புன்னகையுடன் வேலையை செய்து கொண்டிருந்தான். வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை மட்டும் அவனுடைய சுறுசுறுப்பில் தெரிந்தது.



குனிந்தபடியே வேகவேகமாக குப்பைகளை எடுக்கும் பொழுது, ஓரிடத்தில் அதாவது குப்பை அதிகமாக இருந்த இடத்தில் சரிந்து வீழ்ந்தான். அப்பொழுது தான் அங்கு மூன்று அடி ஆழமான குழி இருந்தது அவனுக்கு தெரிந்தது. அந்த குழியை, குப்பை மேடு மறைத்திருந்தது. எழுந்த அவன் அப்படியே அந்த குழியை வெறிக்க பார்த்தான். அப்பொழுது ஒரு கை அவனை தொட்டு "அடிபட்டுவிட்டதா" என்று கேட்க, அந்த திசை நோக்கிப் திரும்பினான். அவனுக்கு அந்த நாள் நினைவுக்கு வந்தது.



பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் சிற்றுண்டியாக, நான்கு இட்லிகளை வாங்கி வைத்து சாப்பிட்டு கொண்டிருக்கும் பொழுது அருகில் நின்ற நாயிற்கு ஒரு இட்டிலியை கொடுத்து,

அது இட்லி சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சியடைவான். பிறகு

மூன்றை அவன் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு புறப்பட்டான். அப்பொழுது அருகிலிருந்த பாட்டி "என்னாபா நீயே நான்கு இட்லி தான் வாங்குகிறாய், அதிலே ஒன்று இதுக்கும் கொடுத்துவிடுகிறாய். உனக்கு போதுமா?" கேட்டதற்கு, "அட சும்மா இருங்க பாட்டி, உலகத்தில் ஒரு இட்லிக்கு கூட வழியில்லாத நிறைய பேர் இருக்கின்றார்கள், எனக்கு நான்கு கிடைத்தது அதில் ஒன்றை தான் இதற்கு தருகிறேன்" என்று பேசிவிட்டு கோணியை தோள்மேலே போட்டுக் கொண்டு வேலைக்கு போவான்.



குப்பை பொருக்கி கொண்டே இருக்கும் பொழுது அவுனுடைய வயறு பசியில் சுண்டி இழுப்பதை உணர்ந்து மதிய உணவிற்கு நேரமானதை புரிந்துக்கொண்டான். அருகில் இருக்கும் மனிகுண்டை பார்த்தான், நேரம் மூன்று மணி. "என்ன அண்ணா சாப்பிட்டாச்சா?" என்று ஒரு சிறுவன் கேட்டான். இதைப் போல் நிறைய சிறுவர்கள் இவனை பார்த்து பேசுவார்கள். ஏன் என்றால் நிறைய சிறுவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்திருப்பான். அந்த சிறுவர்கள் எல்லாம் பணிமனையில், தேநீர் கடையில், கட்டிட வேளைகளில், பட்டறையில், குப்பை பொறுக்கியும், யாசகம் கேட்டும் இருப்பார்கள். அதில் ஒருவன் தான் அவனிடம் கேட்டது. இல்லை தம்பி என்று கூறிவிட்டு, விரைகிறான்.



வெயிலின் காட்டம் உச்சத்தில் இருந்தது. விரைவாக நடந்தான். அவனுடைய பசிக் கொடுமையிலும், அருகில் செல்லக்கூடிய பேருந்து இரைச்சலிலும் ஒரு சிணுங்கல் கேட்டு திரும்பினான். அவனுடைய முகம் கடுமையாக மாறியது. கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தோடியது. ஓலமிடுகிறான். ஆனால், அந்த சத்தம் பேருந்துகளின் இரச்சலில் அமைதியானது. அங்கே ஒரு குழந்தை. கைகளையும் கால்களையும் ஆட்டிக்கொண்டு கதறுகிறது. கோடை வெயில் அந்த பச்சை குழந்தையின் மீது தன்னுடைய வெப்பத்தை கொட்டிக்கொண்டு இருந்தது. வேகமாக ஓடி அந்த குழந்தையை அள்ளி அவனுடைய குப்பை பையினுள் பத்திரப்படுத்தினான். பக்கத்திலிருக்கும் கடைக்கு ஓடி சென்று குளுமையான நீர் வாங்கி அவன் குப்பை பையினுள் ஊற்றினான்.



அந்த குழந்தையின் மீது ஏதேனும் பார்வை வீழுகின்றதா என்று அங்கும் இங்கும் சுற்றிப்பார்த்தான். அவன் மேல் பட்ட வெப்பம், தான் வெய்யிலில் இருப்பதாக உணரவைத்தது. தன் பசியை மறந்து நிழல் தேடி ஓடினான். ஒரு மரம் அவனுடைய கண்ணில் பட்டது. அதற்கு அடியில் உட்காருவதற்கு ஏற்றார் போல் ஒரு பலகையும் இருந்தது. விரைந்தான். அப்பொழுது அவனுடைய சிந்தனை எல்லாம் குழந்தை சாப்பிட்டு இருக்குமா என்ற எண்ணம் தான். போகும் வழியில் ஏதாவது தேநீர் விடுதி தென்படுகிறதா என்று நோட்டம் விட்டபடியே சென்றான். மரத்தின் நிழலினுள் புகுந்தான். அங்கே தன்னுடைய கோணியை மிக மிக கவனமாக இறக்கி வைத்துவிட்டு, குழந்தையை வெளியே எடுத்தான். அழகான ஆண் குழந்தை அது. அதன் வயிரை நோக்கினான். ஒட்டி இருந்த பிஞ்சு வயிறு உணவெடுக்கவில்லை என்பதை உணர்த்தியது. கையில் இருந்த ஒரு துணியை குழந்தை மீது சுற்றிக் கொண்டு தேநீர் விடுதிக்கு விரைந்தான். பாலை நன்றாக ஆற வைக்க சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் கடைக்கு சென்று பால் பாட்டில் வாங்கினான். பாலை நிரப்பிக்கொண்டு மீண்டும் மரத்தின் நிழலுக்குள் வந்து அங்கிருக்கும் பலகையில் அமர்ந்து குழந்தைக்கு பாலூட்டினான். குழந்தை பால் பருகி முடித்த பிறகு ஒரு மகிழ்ச்சியான பெருமூச்சி விட்டான். பசியாறிய களைப்பில் அப்படியே அவன் மடியில் கன்னயர்ந்தது.



யார் குழந்தை இது? காவல் துறையினரிடம் ஒப்படைப்போமா? அல்லது ஏதாவது ஆதரவற்றோர் இல்லத்தில் கொடுப்போமா என்று யோசித்தான். காவல் துறையினரைப் பார்த்தாலே அவனுக்கு ஒரு இனம் புரியாத பயம் உண்டு.யோசித்தப்படியே அவனும் அசதியில் கண் அயர்ந்தான். மாலை சூரியன் செந்நிற கதிர்களை வானத்தில் தெளித்துக் கொண்டே மறைந்தவுடன், கண்விழித்தான். மாலை மங்கி இருள் பரவத்தொடங்கியது. ஆங்காங்கே மின்விளக்குகள் கண்சிமிட்டியது. குழந்தையை அள்ளி மீண்டும் கோணியில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினான். வழியில் இரவுக்கு தேவையான உணவு பொருள்களை வாங்கிக்கொண்டான். குழந்தைக்கு பால் வாங்கவும் மறக்கவில்லை.



அன்று இரவு குழந்தைக்கு பால் காய்த்து பாலூட்டினான். கொஞ்சம் பாலை சூடாக்கி வைத்துக்கொண்டான். அவன் நினைத்தது போல் குழந்தை நள்ளிரவில் அழுது அவனை எழுப்பி விட்டது. விடிந்தது. காலை பறவைகள் இறையைத்தேடி பறந்தது. தெரு கோடியில் புறாக்கள் எதையோ கொத்தி கொத்தி தின்றுகொண்டு இருந்தன. இரவு குழந்தையின் அழுகையில் எழுமியதால், காலை சற்று தாமதமாகவே எழும்பினான். காலை வேலைகளை முடித்துவிட்டு வந்து குழந்தையை பார்த்தான். கண் முழித்து இருந்தது. அவனை பார்த்து ஒரு புன்னகை புரிந்தது. அவன் தன்னை மறக்கின்ற அளவுக்கு இருந்தது அந்த புன்னகை. அது நித்தமும் வேண்டும் என்று நினைத்தான். தனிமையான வாழ்க்கை கடும்கொடையில் இருந்த உணர்வை அந்த புன்னகை அப்படியே தென்றாக மாற்றியது அரைநோடிகளில். குழந்தையை தானே வளர்க்கலாம் என்று நினைத்தான். வெந்நீர் வைத்து துணியில் நனைத்து குழந்தையை துடைத்துவிடுகிறான். பாலை சுட வைத்து பாலூட்டினான்.



ஒரு சுத்தமான துணியில் குழந்தையை கட்டி அவனுடைய தோளில் இருக்கிக்கட்டி கொண்டான். காலை வழக்கம் போல் ஒரு இட்லி நாய்க்கு கொடுத்துவிட்டு அவனும் சிற்றுண்டியை முடித்தான். நடந்து சென்று கொண்டு இருக்கும் பொழுது அவன் உணவு வாங்கிக்கொடுக்கும் சிறுவர்களின் ஞாபகம் வந்தது. அவர்களை மாதிரி இந்த குழந்தை தெருவில் வந்துவிடக்கூடாது என்ற சிந்தனை ஆழமாக அவன் மனதில் ஊன்ற தொடங்கியது. சிறப்பாக இல்லாவிட்டாலும் சுமாராக படிக்கவைக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். எப்போதும் விட அதிகமாக வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்தான்.



என்றும் இல்லாத அளவுக்கு அவனுடைய வேலை மிகவும் சுறுசுறுப்பாக இருந்தது. அவனுடைய வங்கி வீட்டில் இருக்கும் ஒரு உண்டியல் தான். எப்பொழுதெல்லாம் குழந்தை அழுகிறதோ, அப்பொழுதெல்லாம் குழந்தைக்கு பால் ஊட்டிவிடுவான். ஒரு நாள் வீட்டிற்கு வரும்வழியில் ஒரு தாய் அவளுடைய குழந்தைக்கு ஒரு விளையாட்டு பொம்மை காம்பித்துக்கொண்டு இருந்தாள். அந்த குழந்தை சிரித்துக்கொண்டு இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தான். அப்பொழுது அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய குப்பை கோணியை பார்த்தான். அதில் இருந்த குப்பை தாள்களை வைத்து ஒரு அருமையான பூ செய்தான். அதை வைத்து குழந்தையிடம் விளையாட்டு காட்டினான். அதுவும் வாய்விட்டு சத்தம் போட்டது. அந்த மழலை சிரிப்பு மழையில் தன்னையே மறந்து போனான்.



வருடங்கள் உருண்டது. குழந்தை சிறுவனாக வளர்ந்து இருந்தான்.



அவனுக்கு பெயர் அறிவானந்தம் என்று பெயரிட்டு இருந்தான். அதை எங்கோ ஒரு கதையில் படித்த ஞாபகம். அறிவானந்தத்தின் கை தான் இவனை உலுக்கியது. அப்பொழுது தான் பழைய விடயங்களை நினைத்துப் பார்த்தாக உணர்கிறான். "அப்பா பசிக்கிறது" என்று அறிவு கூற.வாப்பா என்று ஒரு உணவு குடிலுக்குள் நுழைகின்றனர். இருவரும் உணவு அருந்தி முடிந்தனர். வெளியே வரும் பொழுது தனக்கு மிகவும் தெரிந்த சிறுவன் சாலையை கடக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறான். எதிரே ஒரு லாரி அச்சிறுவனை ஏற்றிவிடபோகிறது என்ற அச்சத்தில் விரைந்து ஓடி அந்த சிறுவனை தள்ள முயல்கிறான்.



அறிவாந்தம் பின் தொடர்ந்தே செல்கிறான். ஒரு பயங்கர சத்தத்தோடு லாரி நின்றது. அறிவாந்தனம் முகத்தின் மீது இரத்தத்துளிகள் தெளித்தன. சற்று பயத்துடன் அறிவு அருகில் சென்று பார்த்தான். அப்பா என்று அலறுகிறான். அந்த சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் இவனுடைய கால் வாகன சக்கரத்தில் சிக்கிக்கொண்டது. இரத்தம் தெருவில் ஓடையாக ஓடிக்கொண்டு இருக்க, யாரோ முதலுதவி வாகனத்திற்கு (ஆம்புலன்ஸ்) அழைக்க, அறிவு தன்னுடைய கண்ணீரை நிறுத்த முடியாமல் கதறிக்கொண்டு இருந்தான். அறிவை பார்த்துகொண்டே மயங்கினான். வாகனம் வந்தது. இவனை ஏற்றும் பொழுது அறிவும் ஏறிக்கொண்டான். மருத்துவர்கள் இவனுடைய காலை அகற்றினார்கள். காயம் ஆறும் வரை மருத்துவமனையில் இருந்தான்.



வீடு திரும்புகையில் தன்னுடைய கோணியை எடுத்துக் கொண்டு அறிவு வெளியே போனான். அவனை படிக்கவைக்க வேண்டும் என்ற ஆசை இப்படி ஆயிற்றே என்று மனதினுள் குமுறுகிறான். வீட்டினுள் அடைந்து கிடைக்கும் பொழுது அங்கிருந்த காகிதங்களை சில பூக்களாக மாற்றினான். புதிதுபுதிதாய் செய்தான். வண்ணமும் பூசினான். நிறைய செய்து கொண்டு இருந்தான். மறுநாள் ஒரு காகிதபூவை கையில் எடுத்துக் கொண்டு அறிவு போகையில் ஒரு பணக்கார வீட்டு குழந்தை அவளுடைய அம்மாவின் கையைப் பற்றி இழுத்து அந்த பூ வேண்டும் என்று அடம் பிடித்தது. அந்த தாய் இவனிடம் ஒரு தொகையைக் கொடுத்து அந்த காகித பூவை விலை கொடுத்து வாங்கினாள். இதை மாலை பொழுது வீடு திரும்பும் பொழுது அறிவு சொல்லும் பொழுது இவன் முகம் பிரகாசித்தது. நிறைய பொம்மைகளும், பூக்களும் செய்ய ஆரம்பித்தான். அடுத்த நாள் அறிவு எழும் முன் இவன் எழும்பி கையில் காகித பூக்களை எடுத்துக் கொண்டு நான் விற்று வருகிறேன், நீ படிக்க வேண்டும் என்று கூறி தனியாக கம்பை ஊன்றி ஒற்றைக் காலில் கிளம்பினான். அறிவு அவன் போன பாதையை பார்த்து கொண்டே இருக்கிறான். காகிதப் பூ விற்க போன அவன் அறிவாந்தன் மனதில் வாடாமலராக மனம் வீசினான்.

1 comments:

நன்றி தோழர் சுரேந்தர் அவர்களே. அருமையான படம் வரைந்து கொடுத்தீர்கள். மிக்க நன்றி.

Post a Comment