தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது? தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
நூல்: தனிப்பாடல்
பாடியவர்: காளமேகம்
சூழல்: முற்றிலும் ‘த’கர எழுத்துகளைமட்டுமே வைத்து எழுதப்பட்ட வெண்பா இது – கீழே உள்ள ‘சுருக்’ விளக்கம் மொக்கையாகத் தோன்றுகிறதே என்று நினைக்கவேண்டாம், இதைச் சொல்வதற்காக அவர் எப்பேர்ப்பட்ட வார்த்தை விளையாட்டு ஆடியிருக்கிறார் என்பது கொஞ்சம் கவனமாகப் பிரித்தால்தான் விளங்கும் – முழு விளக்கத்தைப் படிக்கவும்
விளக்கம்: வண்டே, நீ பல பூக்களைச் சென்று பார்த்துத் தேன் உண்கிறாய், அதில் மிகவும் இனிப்பான பூ எது?
முழு விளக்கம்:
வண்டே,
தத்தித் தாது ஊதுதி – தத்திச் சென்று (மலர்களில் உள்ள) மகரந்தத்தை ஊதுகிறாய் / குடிக்கிறாய்
தாது ஊதித் தத்துதி – குடித்தபின் மீண்டும் தத்திச் செல்கிறாய்
துத்தித் துதைதி – ’துத்தி’ என்று ஒலி எழுப்பியபடி அடுத்த பூவைத் தேடிப் போகிறாய்
துதைது – அடுத்த பூவுக்குச் சென்று
அத்தாது ஊதுதி – அந்தப் பூவின் மகரந்தையும் குடிக்கிறாய்
தித்தித்த தித்தித்த தாது எது? தித்தித்தது எத்தாதோ தித்தித்த தாது? - நீ இதுவரை குடித்த பூக்களில் / மகரந்தங்களில் மிகவும் இனிப்பானது எது?
1 comments:
மிக அருமை... ரசித்து படிக்கும்படி இருக்கிறது... இதுபோல் நிறைய பதியவும்...
Post a Comment