Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Friday, December 16, 2011

விடுகதைகள்


விடுகதைகள் சிந்திக்க வைக்கக்கூடியது. நான் படித்த, ரசித்த விடுகதைகளை தொடுத்து இங்கே பதித்து இருக்கேன்.

1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? சைக்கிள்

2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? பட்டாசு

3. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? தராசு

4. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? எறும்புக் கூட்டம்

5. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? அஞ்சல் பெட்டி

6. குட்டைப் பெண்ணுக்குப் பட்டுப் புடவை அது என்ன ? வெங்காயம்

7. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன ? தேன்கூடு

8. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? தீக்குச்சி

9. தலை மட்டும் கொண்‌ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? தபால் தலை

10. உலகமெங்கும் படுக்கை விரித்தும் உறங்காமல் அலைகிறான். அவன் யார்? கடல் அலை

11. கட்டிய சேலையை அவிழ்க்க நினைத்தால் கண்ணீரும் கம்பலையும்தான். வெங்காயம்

12. எப்போதும் காதருகில் ரகசியம் பேசிக் கொண்டிருப்பவள்? செல்பேசி

13. அடி மலர்ந்து நுனி மலராத பூ எது? வாழைப்பூ

14. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும் அது என்ன? பேனா

15. காக்கைப் போலக் கருப்பானது, கையால் தொட்டால் ஊதா நிறம், வாயால் மென்றால் நீல நிறம் அது என்ன? நாவல் பழம்

16. தாடிக்காரன், மீசைக்காரன். கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன? தேங்காய்

17. சிவப்புப் பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது அது என்ன? காய்ந்த மிளகாய்

18. காற்றிலே பறக்கும் கண்ணாடி குண்டு, தொட்டுவிட்டால் பார்க்க முடியாது அது என்ன? நீர்க்குமிழி

19. ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? விரல்கள்

20. ஒற்றைக் காலில் ஒய்யாரமாய் ஆடுவான். ஓய்ந்து விட்டால் படுத்துவிடுவான் அவன் யார்? பம்பரம்

21. பச்சை வீட்டுக்கு சிவப்பு வாசல் அது என்ன? கிளி

22. நடைக்கு உதாரணம் சொல்வார்கள். ஆனால் குறுக்கே நடந்தால் சிலருக்கு பிடிக்காது. அது என்ன? பூனை

23. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைபட்டிருக்கிறாள். அவள் யார்? நாக்கு

24. பிறக்கும்போது வால் உண்டு; இறக்கும்போது வால் இல்லை. அது என்ன? தவளை

25. வெளுத்த ஆளுக்கு கருப்புத் தலைப்பாகை. அது என்ன? தீக்குச்சி

26. தரையில் இருப்பான். தண்ணீரில் மிதப்பான். அது என்ன? படகு

27. காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன? சூரியன்

28. எடுக்க எடுக்க வளரும். எண்ணெயைக் கண்டால் படிந்துவிடும். அது என்ன? தலைமுடி

29. இருந்த இடத்தில் நகர்ந்தபடி இரவும் பகலும் செல்வான். அவன் யார்? கடிகாரம்

30. தாயின் வாயில் பிறக்கும்; தரணி எங்கும் சிறக்கும். அது என்ன? தாலாட்டு

31. தண்ணீர் இல்லாத காட்டில் தாகம் எடுத்தாலும் தயங்காமல் போகும். அது என்ன? ஒட்டகம்

32. பார்த்தால் பசப்புக்காரி. கடித்தால் கசப்புக்காரி. அவள் யார்? பாகற்காய்

33. காற்றுப் புகாத வெள்ளைக்கூண்டில் மஞ்சள்புறா மயங்கிக் கிடக்குது. அது என்ன? முட்டை

34. ஓய்வு எடுக்காமல் இயங்கும். ஓய்வு எடுத்துவிட்டால் மறுபடியும் இயங்காது. அது என்ன? இதயம்

35. மூளை உண்டு; ஆனால் சிந்தனை இல்லை. கால் உண்டு; ஆனாலும் நடப்பதில்லை. அது என்ன? பிறந்த குழந்தை

36. பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. அது என்ன? வேர்க்கடலை

37. பூ பூக்கும். காய் காய்க்கும். ஆனால் பழம் பழக்காது. அது என்ன? முருங்கைமரம்

0 comments:

Post a Comment