Blogger news

இன்றைய குறள்

பழமொழி

Blogger templates

Tuesday, February 2, 2010

வாழத்தான் வேண்டும் [சிறுகதை-1]

காலை ஆறு மணி முதலே அவனது மனம் சரியில்லை. எதிலுமே நாட்டம் இல்லாத அவனது செயல்களை, வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காமல் இல்லை. அவனுடைய நடைவடிக்கைகளை கண்ட அவனது தந்தை குழப்பம் அடைந்தாரே தவிர காரணத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. பத்து மணிக்கு அவன் சிற்றுண்டி அருந்தாமல் வெளியில் செல்வது அவருக்கு புதிதாக இருந்தது. குடும்பத்தாருக்கோ குழப்பம் மேலும் அதிகரித்தது.

நாளிதழை மடித்துவிட்டு, அவனுடைய நண்பர்களிடம் தொலைப்பேசி வாயிலாக தன் மகனைப் பற்றி விவாதிக்கின்றார். நண்பர்கள் அவனை சந்தித்து மூன்று நாட்கள் கடந்து விட்டது என்று தெரியவர அவருக்கு மேலும் அதிர்ச்சி அதிகரிக்கின்றது. ஒன்றுமே புரியாமல் அவனது தந்தை நொந்தபடி நாற்காலியில் சாயிந்து உட்கார்ந்து கண்களை மூடி தன் மகனைப் பற்றி சிந்திக்கின்றார்.

அவனோ மனதில் ஏதோ பாரத்தை சுமந்து கொண்டு கால் போன பாதையில் சென்று கொண்டிருக்கின்றான். வழியில் ஒரு கடையில் ஒரு வெண்சுருட்டு வாங்கி பற்ற வைத்து புகைக்கும் பொழுது அவனது கண்கள் மட்டும் வானத்தை பார்த்துக்கொண்டிருக்கின்றது. அவனது கண்கள் கலங்கி கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்க்கின்றன.

அவன் புகைப்பிடித்தபடி தனது கற்பனை குதிரைகளை ஓடவிட்டான். அவனது நெஞ்சில் முதல் நாள் பார்த்த செய்திகளின் தொகுப்பு ஆழமாய் பதிந்துவிட அதை மீண்டும் ஒரு முறை நினைக்கும் பொழுது, முன்னைவிட இப்பொழுது இன்னமும் வேகமாய் புகைப் பிடிக்கின்றான். ஒரு வெள்ளைத் தாள் காசு கொடுத்து வாங்குகின்றான்.

சூரியன் தனது செங்கதிர்களை வானத்தில் சிதறவிட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருக்க, வாசலை நோக்கியே அவனது தந்தையின் பார்வை அவனை எதிர்பார்த்து நிலைத்திருக்கின்றது. மதிய உணவு உண்ணாமல் அவர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்கிறார் என்பதை அவரின் முகம் தெளிவாக கூறுகின்றது.

ஆனால் அவனோ, மடித்து வைத்த வெள்ளைத் தாளை தனது சட்டைப்பையில் இருந்து மீண்டும் ஒரு முறை எடுத்துப் பார்க்கிறான். தான் எழுதியது சரியாக இருக்கின்றதா என்று ஒரு முறை படித்துப் பார்த்துவிட்டு தனது நடையை தொடர்கிறான். நீண்ட தூரம் அவன் கடந்து வந்துவிட்டான் என்பதை அவனது கால்கள் உணர்த்துகின்றது.காலையிலருந்து உணவருந்தாமல் நடந்த அவன் ஓரிடத்தில் அமர்கின்றான்.

அவனது தந்தையோ கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டு வாசலுக்கு வந்து முன்னால் நிற்கின்றார். அப்பொழுது அவனது ஐந்து நண்பர்களும் அங்கு வந்து சேர்கின்றார்கள். அவர்களிடமிருந்து ஒரு மகிழ்ச்சி தகவல் கிடைக்கும் என்று நினைத்த அவருக்கு ஏமாற்றமே காத்திருந்தது.

இரவு ஒன்பது மணி வரை ஒரு தகவலும் தெரியாத காரணத்தால் காவல் நிலையம் சென்று புகார் ஒன்றை பதிவு செய்யலாம் என்று நினைத்த அவர் விடியும் வரைக் காத்திருக்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் நாற்காலியில் அமர்கிறார்.

காலையில் நாளிதழை படித்துகொண்டிருக்கும் பொழுது அவர் படித்த செய்தி தலையில் இடி பாய்ந்தது போல் உணர்கிறார். அவருக்கு ஏதோ உள்ளுக்குள் தோன்ற அவசரமாய் புறப்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவகம் செல்கிறார். அங்கே அவர் கண்ட காட்சி அவரின் நெஞ்சத்தை இறுக்கியது போல் இருந்தது. தனது மகன் மாவட்ட ஆட்சியாளர் அலுவகத்தின் பின்புறம் இருக்கும் மரத்தில் தன்னைத்தானே மாய்த்து கொண்டான். அவருக்கு கண்கள் இருண்டது, பூமி சுற்றியது, மெல்ல அவர் கீழே சாயும் முன் அவனது நண்பர்கள் அவனது தந்தையை தாங்கி பிடித்தனர்.

அவரை தேற்றி இல்லத்திருக்கு அழைத்து வந்து உள்ளே நுழையும் முன், பதிவு தாபால் ஒன்று வருகின்றது. பிரித்தால் அது அவரது அன்பு மகனின் கடிதம். தமிழீழ விடுதலைப் போரில் மாண்ட தமிழ் சொந்தங்களுக்காக தன் இன்னுயிரை துறந்திருக்கின்றான் என்று அறிந்து கொள்கிறார். தமிழர்களுக்காக தன் புதல்வன் இந்த உயிர்த்தியாகம் செய்துள்ளான் என்பதை நினைத்து பெருமைக் கொண்டாலும் அவனையே நம்பியிருந்த குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்திவிட்டான் என்று அவர் மனம் வலிக்கத்தான் செய்தது. இரண்டு நாள் கழித்து பாரத்துடன் கூலி வேலை தேடி தந்தை புறப்படுகின்றார்.

அவர் கண்கள் மட்டுமல்ல அவர் இதயமும் கலங்கி தான் போயிருந்தது.

0 comments:

Post a Comment