அன்பு தாயே,
ஐயிரண்டு மாதங்கள் உன்னில் என்னை சுமந்து
என் உயிர் இவ்வுலகை காண அல்லும் பகலும்
காத்தாயே...
கருவறையில் என்னை சுமக்கும் பொழுது
என்னென்ன கட்டுபாடோடு வாழ்ந்தாய்..
பிடித்த உணவுகளை உட்கொள்ளாமல், எனக்காக
உன் சுவையை அடக்கிகொண்டாயே!
உருவத்திலும் நடையிலும் மாற்றமும் ஏற்பட்டது
இந்த பூமிப்பந்தில் நான் வந்த பொழுது
உன் இரத்தத்தை பாலாக்கி ஊட்டினாய்!
நீ உண்ணாமல் இருந்த பொழுதிலும் எனக்கு பசியாற்றினாய்!
எத்தனை இரவுகள் என்னை பசியாற்ற
நீ தூக்கத்தை தொலைத்திருப்பாய்.
கண்ணீரே உன்னிடத்தில் வற்றி தான்
போனது, நோயுற்று நான் இருந்த காலங்களில்.
நான்கு கால்களில் தவழ்ந்த நான்
முதல் முறை இரு கால்களில் நின்ற பொழுது,
உன் கண்களின் நீர்த்துளிகள் கன்னத்தில்
வழுக்கி சென்றது.
நடைவண்டி பழகியபோதும், சாஞ்சாடும் குதிரையாடும் போதும்
எனக்கு ஒன்றும் நேரக்கூடாது என்று
உன் மனம் பதபதைத்து தான் போனது.
மாலை நேரங்களில் விளையாடும் பொழுது,
வேலியோரம் இருக்கும் பூச்சிகளின் மேலேயும்,
இரவு நேரங்களில் தூங்கும் பொழுது,
வீட்டில் இருக்கும் கொசுக்களின் மீதும்
உனக்கு கோபமும் வந்தது.
அதையும் தாண்டி "என்னை தீண்டு என் செல்வத்தை
தீண்டாதே", என்று அவைகளிடமும்
நீ பேசவும் செய்தாய்.
பள்ளிக்கு நான் அழுதுக்கொண்டு
குதிரை வண்டியில் போனாலும்,
மதிய இடைவேளையில் கொடும் வெயிலிலும்,
மழையிலும் உணவு ஊட்ட கால் கடுக்க வருவாயே!
ஏன் என்று பக்கத்து வீட்டு அத்தை
கேட்டால் நான் ஊட்டாமல் என் கண்மணி
உணவெடுக்கமாட்டன் என்று கூறினாயே!
அந்த தயிர் சாதமும், நறுக்கிய மாம்பழமும்
இன்னமும் நிழலாய் என் இதயத்தின் ஆழத்தில் இருக்கிறது!
அன்று நீ விரல்பிடித்து தமிழ் கற்றுக்கொடுத்தாய்!
மாலை பொழுதில் என்னுடன் நேரம்
செலவழித்து, என் தந்தைக்கு
ஏனோ உணவு பரிமாறுவது தாமதமாக போனது.
அதற்காக பல நேரங்களில் வசையும்,
சில நேரங்களில் கசையும் வாங்கியுள்ளாய்.
நீ எனக்கு ஒதுக்கிய நேரங்களை இன்று உனக்கு
ஒதுக்க இயலாமல், நீ ஒரு ஊரிலும்,
நான் ஒரு ஊரிலும்!
நீ என் விரல் பிடித்து சொல்லிகொடுத்த தமிழை,
மடிக்கணியில் தட்டச்சி பலகையை
பயன்படுத்தி இணையத்தில் வாழ்த்துக்களும்
நன்றிகளும் சொல்கிறேன்.
நீ என் தாய் என்பதில் எனக்கு பேரின்பம்.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.......
0 comments:
Post a Comment